கூடலுார்: குமுளியில் உள்ள தமிழக பஸ் ஸ்டாண்டில் ஐயப்ப பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை மற்றும் ஓய்வு எடுப்பதற்கான இடவசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கூடலுார் நகராட்சியில் 21 வது வார்டாக உள்ளது குமுளி பஸ் ஸ்டாண்ட். எல்லையில் கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் உள்ளது. அதே வேளையில், தமிழக பஸ் ஸ்டாண்ட் எவ்வித வசதியும் இல்லை. குடிநீர் இல்லை. கழிப்பறை பூட்டிய நிலையிலேயே இருந்தது.
சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வரத் துவங்கியுள்ளனர். இதனால் கூடலுார் நகராட்சி சார்பில், குமுளியில் உள்ள தற்காலிக கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் வசதியும், பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான இடவசதியும் செய்து தரப்பட்டுள்ளன. சபரிமலை சீசன் முடியும் வரை இவை அனைத்தையும் பராமரிப்பதற்காக, நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.