அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்போதும் மூவுலகமும் வியக்கும் விதத்தில் பாற்கடலில் இருந்து ஜோதி வடிவமாக மகாபுருஷர் அவதரித்தார். பேரழகு மிக்க அவரே ஒளி சிந்தும் ஆபரணம், பட்டு பீதாம்பர தாரியாக நீலநிற திருமேனியுடன் அமுத கலசம் ஏந்திய கோலத்துடன் தன்வந்திரி பகவானாக எழுந்தருளினார். திருமாலின் அம்சம் கொண்ட அவர் அனைத்து வியாதிகளையும் போக்கவல்லவராக ஆயுர்வேதத்தின் தந்தையாக விளங்கினார். ராமாயணம், பாகவதம் போன்றவற்றில் தன்வந்திரி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆயுர்வேத சாஸ்திரத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு தன்வந்திரி முதலில் உபதேசம் செய்தார். பிரம்மா மூலம் தட்ச பிரஜாபதியும், அவரிடமிருந்து அஸ்வினி குமாரர்களும், தேவேந்திரனும் அதை அறிந்து கொண்டனர். பின்னர் ஆங்கிரசர், வசிஷ்டர், காஸ்யபர், பரத்வாஜர் போன்ற ரிஷிகள் மூலம் ஆயுர்வேதம் பூவுலகத்திற்கு வந்தது. தேகநலம் காக்கும் தன்வந்திரிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்களில் சந்நிதிகள் இருக்கின்றன. இவை தவிர அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெரு லட்சுமி மருத்துவமனை வளாகத்திலும், மதுரை பொன்மேனி மெயின்ரோடு பகத்சிங் தெருவிலும் தன்வந்திரிக்கு தனி கோயில்கள் உள்ளன. என்.கே.என்.