பதிவு செய்த நாள்
14
டிச
2018
01:12
திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில் யானைகள், புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.தமிழக அரசு சார்பில், கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு, ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, பவானி ஆற்றுப்படுகையில், இந்த ஆண்டுக் கான புத்துணர்வு முகாம், இன்று, 14ம் தேதி துவங்கி, ஜனவரி, 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின், திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை, ஆண்டாள், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவில் யானை ஆகிய இரண்டு யானைகள், நேற்று காலையில், லாரிகளில் ஏற்றி, புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யானைகளுடன், கால்நடை மருத்துவக் குழுவினரும் சென்றுள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை, சிகிச்சைக்கு பின் கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால், புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. திருவானைக்காவல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால், அந்த கோவில் யானை, அகிலா, சில நாட்களுக்கு பின், புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.