பழநி: பழநி முருகன் கோயில் ஐம்பொன் உற்ஸவர் சிலை மோசடி வழக்கை, நேரடியாக விசாரிக்க உள்ளதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். கடந்த 2004ம் ஆண்டு பழநி முருகன் கோயிலுக்கு 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்ததில் தங்கம் மோசடி செய்ததாக, நிர்வாக அதிகாரி கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா உட்பட 4 பேரை பொன் மாணிக்கவேல் குழுவினர் கைது செய்தனர்.
மாஜி ஆணையர் தனபால் மற்றும் ஒரு இணை ஆணையர் உட்பட சில முக்கியப்புள்ளிகளுக்கு வழக்கில் தொடர்பு உள்ளது. இந்த வழக்கை பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அரசியல் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் பணி நிறைவுக்குபின் நீதிமன்றம் மூலம் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழநி முருகன் மீது அளவற்ற பக்தி கொண்ட அவர், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் கடந்த பத்து நாட்களில் மூன்று முறை இங்கு வந்துள்ளார்.நேற்றிரவு பழநி வந்த அவர் மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் தரிசனம் செய்தார்.பின்னர் அவர் கூறும்போது, பழநி ஐம்பொன் உற்ஸவர் சிலை மோசடி வழக்கை நானே நேரடியாக விசாரிக்க உள்ளேன். இதற்காக ஓரிரு வாரங்களில் பழநி வருவேன் என்றார்.