பதிவு செய்த நாள்
15
டிச
2018
12:12
சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 12ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, 13ம் தேதி மிருத்சங்கரணம், ரஷாபந்தனம் நடந்தது. நேற்று காலை, கொடியேற்று விழாவை ஒட்டி, சிவகாமி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி, பிரகாரம் வலம் வந்து, காலை, 9:20 மணிக்கு, நடராஜருக்கு எதிர்புறமுள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.வரும், 18ம் தேதி தெருவடைச்சான், 22ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, நடராஜர், சிவகாம சுந்தரி, வினாயகர், முருகன் சுவாமிகள், தனித்தனி தேர்களில், நகரின் நான்கு வீதிகளில் வலம் வந்து, மாலையில், மண்டப முகப்பு ராஜசபையில் அருள்பாலிக்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு, ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது. சிறப்பு விழாவான ஆருத்ரா தரிசனம், வரும், 23ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, பிற்பகல், 2:00 மணிக்கு, ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.பாதம், பிஸ்தா மாலைநடராஜர் கொடி மரத்திற்கு, வில்வம், பூ மாலைகள் மட்டுமே சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஆருத்ரா கொடியேற்றத்தின் போது, கொடிமரத்திற்கு, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டு புடவை மற்றும் பூக்களால் கொடிமர மாலைகள் தயார் செய்யப்பட்டு, கொடிமரத்திற்கு சாத்தப்பட்டது.