பதிவு செய்த நாள்
19
டிச
2018
12:12
தேனி : மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உற்சவமூர்த்தி புறப்பாட்டிற்கு பின் தேனி அபிநயா நாட்டிய நடன நிகழ்ச்சி, திருவாய் மொழியில் திருவேங்கடமுடையான் என்ற தலைப்பில் சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி புறப்பாடு, அலங்காரங்களை ஸ்ரீசடகோப ராமானுஜ கோஷ்டியினர் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சட்ட ஆலோசகர் உள்ளிட்டோர் செய்தனர்.
* தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்குப்பின் மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம், விஷேச பூஜைகள் நடந்தது. கோயில் வடக்குபுறம் உள்ள பரமபத வாசல் வழியாக சுவாமி வலம் வந்தார்.
* தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் காய்கறிகளால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.பெரியகுளம்: ைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்க வாசல் வழியாக உற்சவர் நம்பெருமாள் திருக்கோலத்தில் காட்சியளித்தார். மூலவர் பூக்கள் அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் உற்சவர் கருடவாகனத்தில் பெருமாள்கோயில் தெரு, தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கண்ணன், பாபு உள்ளிட்டோர் செய்தனர்.
* நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5:30 மணிக்கு திருப்பாவை சேவித்தல் மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. ராதை, கிருஷ்ணருக்கு விசஷே திருமஞ்சனம், வீதி உலா, சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். இரவு முழுவதும் அகண்ட ஹரே நாமம் நாமகீர்த்தனம், மதுரகீதம் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பிரார்த்தனை மைய பக்தர்கள் செய்தனர்.
* பாம்பாற்று ராமபக்தர் ஆஞ்சநேயர் கோயிலில், மூலவர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உற்சவர் துளசி மற்றும் மலர் அலங்காரத்தில் வீதி உலா சென்றார்.
* தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயிலில், அபிஷேகம், ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில், மூலவர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோயிலை வலம் வந்து வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 11:00 மணிக்கு ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார் எதிர்சேவை செய்ய சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்கவாசல் வழியாக வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர்.வடக்கு வெளியில் உள்ள டி.ராஜகோபாலன்பட்டி பெரிய நாயுடு பங்காளிகள் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. போடி: போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல, நவரத்தினங்களால் ஆன ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் , மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. ஏராளமானோர் தரிசித்தனர். அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்தார்.தேவாரம்: தேவாரம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. ஊஞ்சல் மண்டபத்திலிருந்து உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக சொர்க்க வாசல் வழியாக அழைத்து செல்லப்பட்டார். கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தேவாரம் ஜமின்தார் சிவராஜ பாண்டியன், இந்து பரிபாலன சபை ராஜகோபால், ராஜேந்திரன், இளைய ஜமின்தார் கிருஷ்ணக்குமார், தேவாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உத்தமபாளையம்: உத்தமபாளையம் மகாலட்சுமி தாயார் சமேத யோகநரசிங்கபெருமாள்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தாயாருடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் கோயிலின் வடக்கு வாயில் வழியாக எழுந்தருளினார். பக்தர்கள்கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். சடாரி மூலம் பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.