உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அருணோதய தரிசனம் நடந்தது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு புதிய சந்தனக்காப்பிடுதலும், அருகே உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதிகாலையில் அருணோதய கால தரிசனத்தை முன்னிட்டு மரகத நடராஜர் சர்வ மலர் அலங்கார பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமானுக்கு வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மாணிக்க வாசக சுவாமிக்கு காட்சிகொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.