பதிவு செய்த நாள்
31
டிச
2018
11:12
சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரி மலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நெய்யபிஷேகம் ஆரம்ப மாகிறது. 144 தடை உத்தரவு ஜன., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண்டலபூஜை முடிந்து டிச., 27- இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றினார்.தொடர்ந்து கோயிலை வலம் வந்த மேல்சாந்தி, 18- படி வழியாக இறங்கி ஆழியில் தீ வளர்த்தார். அவர் திரும்பிய பின்னர் 18 படி வழியாக பக்தர்கள் ஏறி வந்தனர். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த பின் மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார். ஜன., 18- காலை 10:00 மணி வரை தினமும் நெய்யபிஷேகம் நடைபெறும். கடந்த இரண்டு நாட்களாக வந்த பக்தர்கள் நிலக்கல்லில் தங்கி யிருந்தனர். அங்கிருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று காலை 11:30 மணிக்கு பின்னர்தான் பம்பைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதனால் நேற்று காலை முதலே பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு நடந்தே வந்தனர்.பஸ்களில் பக்தர்கள் வந்த பின்னர் பம்பையில் கூட்டம் அதிகரித்தது. பகல் 2:00 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். நடை திறந்த போது சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஜன., 14ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜன., 12-ல் திருவாபரணம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. ஜன.,18- காலை 10:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ம் தேதி மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடக்கிறது. சபரிமலையில் போராட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பத்தணந்திட்டை எஸ்.பி. கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து ஜன., 5 வரை இலவுங்கல், நிலக்கல், பம்பை, சன்னி தானம் ஆகிய இடங்களல் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.