பதிவு செய்த நாள்
07
ஜன
2019
11:01
பவானி: பவானி கூடுதுறை, திருவேணி சங்கமத்தில், நேற்று காவிரி நீருக்கு ஆரத்தி விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, கூடுதுறை திருவேணி சங்கமத்தில், நேற்று காலை மற்றும் மாலையில், நீருக்கு நன்றி எனும் ஆரத்தி விழா நடந்தது.
கோவையில் ஆன்மிக வழிகாட்டியும், வாழ்க்கை நல மேம்படுத்துபவருமான, குருஜி மித்ரேஷிவா வழிகாட்டுதல்படி செயல்படும், தக்ஷிணா பவுண்டேஷன் சார்பில், இந்நிகழ்ச்சி நடந்தது.செண்டை வாத்திய முழக்கத்துடன், 101 கலச ஊர்வலம், நீர் குறித்த நடனம், சிங்காரி மேளம் உள்ளிட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், கங்கையில் நடக்கும் ஆரத்தி விழா போன்று, செட் அமைத்து, பரம்பரை, பரம்பரையாக கங்கை கரையில் ஆரத்தி விழா செய்யும் அர்ச்சகர்கள் ஒன்பது பேர் குழுவினர், காவிரி அன்னைக்கு, எட்டு திசைகளிலும் தீப, துாப ஆரத்தி எடுத்தனர்.விழாவில், மித்ரேஷிவா பேசியதாவது:உயிர் வாழவும், அன்றாட தேவைக்காகவும், நீரை பயன்படுத்துகிறோம். நாம் வாழும் இந்த உலகமும், நமது உடலும், 75 சதவீதத்துக்கும் அதிகமாக, நீரினால் ஆனது. நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை, நீர் பிரதிபலிக்கிறது என்பதை, அறிவியல் ஆய்வில், ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர், மசரோ எமட்டோ நிரூபித்துள்ளார். நீரின் மூலக்கூறுகளை பிரித்து ஆராய்கையில், வெளிப்பட்ட உண்மை என்னவென்றால், நாம் அன்பு செலுத்தும் போது, நீர் ஒரு வைரத்தை போல ஜொலிக்கிறது.நாம் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துகையில், நீர் சிதைந்து, உரு அழிந்து போவதையும் ஆய்வில் நிரூபித்துள்ளார்.காலம் காலமாக, நம்மை வாழ வைக்கும் நீருக்கு நன்றி சொல்லும் வழக்கம், உலகின் பல நாடுகளில் உள்ளது. ஏன் இந்தியாவிலும் கூட, வற்றாத ஜீவ நதிகளான கங்கை போன்ற நதிகளுக்கு, அன்றாடம் மஹா ஆரத்தி காட்டப்படுகிறது. இதை, நம் காவிரி அன்னைக்கு காட்ட வேண்டும் என எண்ணி, இந்நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.சுற்றுச்சூழல் துறை அமைச்சர், கருப்பணன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.