பதிவு செய்த நாள்
18
ஜன
2019
01:01
காஞ்சிபுரம்: காஞ்சியில், வெளியூர் பக்தர்களை குறி வைத்து, போலி பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் தரகர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் வழிபட, வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர், தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கைலாசநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சியம்மன் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவில்களுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில், பட்டு சேலை தரகர்கள் பேச்சு கொடுத்து, போலி பட்டுச் சேலை கடைகளுக்கு அழைத்து சென்று, மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து, உள்ளூர் தரகர்கள் பலர், இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். குறைந்த விலைக்கு பட்டுச் சேலை கிடைப்பதாகவும், தள்ளுபடி, இலவசம் உள்ளிட்ட சலுகைகளை கூறி, வெளியூர் பக்தர்களை, வாகனத்தோடு அழைத்து செல்கின்றனர். அவ்வாறு வெளியூர் ஆட்களுக்கு விற்கப்படும் பட்டுச் சேலைகள் பெரும்பாலும், 2,000 அல்லது, 3,000 ரூபாய் மதிப்பிலானதாக உள்ளன. வெறும், 2,000 அல்லது 3,000 ரூபாய்க்கு பட்டுச் சேலைகள் கிடைக்காது என்ற விழிப்புணர்வு, வெளியூர் பக்தர்களிடம் இல்லாததால், பலரும் இத்தகைய தரகர்களால் ஏமாறுகின்றனர். இதுமட்டுமின்றி, வரதராஜ பெருமாள் கோவில் வாசல் வெளியே, 500, 1,000 ரூபாய்க்கு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, ரகர்கள் பலரும் வலம் வருகின்றனர்.இது போன்ற, முறைகேடான செயல்களில் ஈடுபடும் தரகர்களை, போலீசார் கைது செய்ய வேண்டும் என, உள்ளூர் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். அதே சமயம், வரதராஜ பெருமாள் கோவில் வாசலில், அன்றாடம் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. ஆனால், சமீப காலமாக போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால், தரகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என, பல தரப்பினரும் வெளியூர் நபர்களை, பல விதங்களில் ஏமாற்றுகின்றனர்.