பண்ருட்டி: பண்ருட்டி மற்றும் கண்டரக்கோட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் உள்ள தென் பெண்ணையாறு, பண்ருட்டி கெடிலம் ஆற்றுத் திருவிழா விமரிசையாக நடந்தது. இதனையொட்டி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் 50 கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக மேள தாளம் முழங்க அழைத்து வரப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் சகிதமாக வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதே போன்று, பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நடந்த திருவிழாவில் 40 கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றனர். இதேபோன்று விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்று திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.