பழநி, பழநி முருகன் மலைக்கோயிலில் 2வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக இணை ஆணையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.பழநி மலைக்கோயிலில் தற்போதைய ரோப்கார் ஸ்டஷேன் அருகே ரூ.73 கோடி மதிப்பில் 2வது ரோப்கார் அமைக்கப்பட உள்ளது.
2018 ஜூன் 4ல் இதற்கான பூமிபூஜை நடந்தது. பிரான்சை சேர்ந்த இக்காட் எரிக் ரோப்வே நிறுவனம், சென்னை நிறுவனத்துடன் இணைந்து புதிய ரோப்கார் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்க உள்ளனர். இதுதொடர்பாக பழநியில் 2வது ரோப்கார் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், சென்னை இந்துசமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்தியாகினி, பொறியாளர் ரெங்கசாமி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் மார்ச் 15க்குள் ரோப்கார் பெட்டிகள் வடிவமைப்பு இறுதி செய்து பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: புதிய ரோப்காரில் ஒருபெட்டியில் 10 பேர் அமரலாம். ஒருமணி நேரத்தில் 1200 பக்தர்கள் செல்லலாம். 18 மாதங்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பின் பாறைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கும். தொடர்ந்து 5 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.