மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) நினைத்தது நிறைவேறும்
பதிவு செய்த நாள்
13
மார் 2019 04:03
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!
சூரியன், குருபகவான் நற்பலன் வழங்குவர். சுக்கிரன் மார்ச் 22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் மார்ச்20 வரையும், புதன் ஏப்.8க்கு பிறகும் நன்மை தருவார்கள். நினைத்தது விரைவில் நிறைவேறும். பணவரவு சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். மார்ச் 22க்கு பிறகு பொருளாதார வளம் சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். புதிய வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்கள் மார்ச் 20க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக மார்ச் 15,16 ஏப்ரல் 11,12ல் அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விருந்து, விழா சென்று வருவீர்கள். மார்ச் 19,20ல் புத்தாடை, அணிகலன்கள் சேரும். மார்ச் 21,22ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆனால் ஏப்.6,7,8ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன ஏப்.8க்கு பிறகு மறையும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஏப்.8க்கு பிறகு முன்னேற்றத்திற்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர். பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 20க்குள் கேட்டு பெறவும். ஏப்.3,4,5 சிறப்பான நாட்களாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து ஏப்.8க்கு பிறகு விடுபடுவர். மார்ச் 25,26,27ல் எதிர்பாராத வகையில் வருமானம் இருக்கும். மார்ச்17,18, ஏப்.9,10,13ல் சிறுசிறு தடைகள் வரலாம். தொழிலில் ஏப்.8க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் ஆதாயத்தை தரும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு மார்ச் 20வரை சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதன்பின் சிரத்தை இருந்தால் மட்டுமே விரும்பிய பதவி கிடைக்கும். மார்ச் 23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு ஆசிரியர், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் ஏப்.8 வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதன் பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர்.
விவசாயிகளுக்கு மஞ்சள், நெல் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். பழவகைகள், கீரை வகைகளில் வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. ஏப். 8க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும்.
பெண்கள் வாழ்வில் குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும் .கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மார்ச் 28,29ல் சிறப்பான பலனை காணலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். சகோதரவழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். ராகுவால் உறவினர்கள் வகையில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மார்ச் 21க்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.
* நல்ல நாள்: மார்ச் 15, 16, 19, 20, 25, 26, 27, 28, 29 ஏப்.3, 4, 5, 6, 7, 8, 11, 12 * கவன நாள்: மார்ச் 30, 31 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 1,3,9 நிறம்: மஞ்சள், சிவப்பு
பரிகாரம்: * வெள்ளிக்கிழமையில் நாக தேவதை வழிபாடு * செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம் * பிரதோஷத்தன்று நந்திக்கு அருகம்புல் மாலை
|