குலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் கடனாக 100 அண்டாக்களில் அக்கார அடிசிலை(100 லிட்டர் பாலை காய்ச்சி 25 லிட்டர் பாலாக மாற்றி முந்திரி,பாதாம், பிஸ்தா, கற்கண்டு, குங்குமப்பூ போன்றவைகளை விட்டு கிளறிய சர்க்கரை பொங்கல்) செய்து தருவதாக வேண்டிக்கொண்டார். அதன்படியே ஆண்டாள், ரங்கமன்னாரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால், ஆண்டாள், அழகருக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செய்யவில்லை. பின், 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணம் கொண்டு அக்கார அடிசில் தயாரித்து அழகருக்கு படைத்தார். ராமானுஜரின் பக்திக்கு இரங்கிய அழகர், அவருக்கு தரிசனம் கொடுத்தார்.
தர்மதேவனின் தவபூமி: உயிர்கள் செய்த பாவபுண்ணியத்தின் படி அவரவர் விதி முடிந்ததும் உயிரைப் பறிப்பவர் எமதர்மன். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் நீதி நெறி தவறாமல் இருப்பதால் இவருக்கு தர்மராஜர், நீதிதேவன் என்ற பெயர்களும் உண்டு. காலச்சக்கரத்தை இயக்குபவர் என்பதால் காலதேவனாகவும் இருக்கிறார். இவர் ஒருசமயம், தர்மவடிவமான காளையின் வடிவெடுத்து பூலோகத்தில் விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார்.அந்த இடமே அழகர்கோவில் பகுதியாகும். தவத்திற்கு இணங்கிய பெருமாளும் சுந்தரராஜராக பேரழகுடன் அவர் முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அதே கோலத்தோடு என்றென்றும் அங்கு வீற்றிருக்கும் படியும் தர்மதேவன் வேண்டிக் கொண்டார். அதன்படி, தேவலோக தச்சனான விஸ்வகர்மாவை அழைத்து பெரிய கோவிலை நிர்மாணித்து வழிபட்டார்.