பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
11:04
கூடலுார், கேரள வனத்துறையின் பலத்த கெடுபிடிகளுடன் தமிழக -கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக அதிக பக்தர்கள் நடந்து சென்றனர்.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக -கேரள எல்லையில் வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கண்ணகியை கோவலன் வானுலகிற்கு அழைத்துச் சென்ற தினமான சித்ரா பவுர்ணமியன்று விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று விழா கொண்டாடப்பட்டது.கேரள வனப்பகுதி காலை 6:00 மணி முதல் குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குமுளியில் இருந்து 14 கி.மீ., துாரமுள்ள கோயிலுக்கு ஜீப்பிலும், நடந்தும் சென்றனர். கொக்கரக்கண்டம் அருகே பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கேன்களை பறிமுதல் செய்தனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கேரள வனத்துறை, பக்தர்களை சோதனை என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை செய்தது. ஜீப் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, கேரள வனத்துறை மூலம் செய்து தரப்பட்டிருந்தது.
ஆபத்தான வளைவுகள் உள்ள பாதையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு மணி நேரம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர். மங்கலதேவி கண்ணகி அம்மன், சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.தமிழக பூஜாரி ராஜலிங்கம், அர்ச்சனை செய்தார். காலையில் அம்மனுக்கு மலர் வழிபாடு, யாகபூஜை நடந்தது. பெண்களுக்கு மங்கல நாண், வளையல் வழங்கப்பட்டது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும் பூமாரி விழாவும் நடந்தன. கண்ணகி கோயில் மற்றும் சிவன் கோயிலில் கலச பூஜை நடந்தது. அறக்கட்டளை கவுரவத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், கும்பம் இட்டு யாக பூஜை நடத்தினர். குடந்தை தமிழ்ச்சசங்கம் சார்பில், சிலப்பதிகார பாடல்கள் பாடப்பட்டன.பளியன்குடி வழிபளியன்குடி வனப்பகுதி வழியாக, சென்ற தமிழக பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பில், 5 லிட்டர் கேனில் தண்ணீர் வழங்கப்பட்டது. சித்தா மருத்துவ பிரிவு சார்பில் டாக்டர் சீராஜூதீன் தலைமையில் நிலவேம்பு கஷாயம், வலி நிவாரணி தைலம் வழங்கப்பட்டது. கால்வலியைப் போக்க மசாஜ் செய்யப்பட்டது. கூடலுாரில் இருந்து பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பளியன்குடியிலும், கோயிலிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து நெரிசல்: குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜீப் கடந்ததும் துாசி அதிகமாக இருந்ததால் நடந்து சென்றோர் சிரமம் அடைந்தனர். கோயிலில் இருந்து குமுளி வரை மதியம் 1:00 மணியில் இருந்து 1:30 மணி வரை சாரல் மழை பெய்ததால் காலையில் இருந்து நிலவிய கடுமையான வெப்பம் குறைந்து குளுமை ஏற்பட்டது.