1935ல் நாடெங்கும் மருத்துவம், சட்டம், வணிகம் என பலதுறை சார்ந்தவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் செய்தனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு, கோல்கட்டாவுக்கு அருகிலுள்ள மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில் காஞ்சிப்பெரியவர் மிட்னாபூரில் முகாமிட்டிருந்தார். இதை கேள்விப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் சுவாமிகளைத் தரிசிக்க விரும்பினர். சிறை அதிகாரியிடம் அனுமதி கேட்டனர்.
ஆங்கிலேயரான அவர் கண்டிப்பு மிக்கவர் என்றாலும் வீரர்களின் ஆன்மிக சிந்தனையை தடுக்க விரும்பவில்லை. தானும் அவர்களுடன் வருவதாகவும், மாலை 5:00 மணிக்கு கிளம்பி ஒரு மணி நேரத்திற்குள் தரிசித்து விட்டு திரும்ப வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்தார்.
வீரர்கள் சென்ற போது அங்கு மாலைநேர வழிபாட்டில் இருந்தார் காஞ்சிப்பெரியவர். நேரம் கடந்ததால் மணி ஐந்தே முக்கால் ஆனது. எப்போது காஞ்சிப்பெரியவர் வருவார்? ஆறு மணிக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டுமே? என யோசித்த வீரர்கள் சிறைக்கு புறப்பட தயாராகி விட்டனர்.
இந்நிலையில் விரைவாக பூஜை முடித்த சுவாமிகள் வெளியே வந்தார். அவரைக் கண்ட வீரர்கள் உள்ளம் உருகினர். தனிப்பட்ட கோரிக்கை எதுவும் தோன்றவில்லை. ஒருமித்த குரலில் ’நம்நாடு சுதந்திரம் பெற வேண்டும்’ என பணிவுடன் வேண்டினர்.
’பெற்ற தாயும் பிறந்த நாடும் ஒன்றே; அம்பாள் அருளால் நம் பாரததேசம் சுதந்திரம் பெறும்’ என்று வாழ்த்தி பிரசாதம் வழங்கினார் சுவாமிகள். அதைக் கண்ட அதிகாரி ஆச்சரியப்பட்டார். துப்பாக்கிக்குக் கூட அஞ்சாமல் நிமிர்ந்து நிற்பவர்கள், சுவாமிகளின் அன்புக்கு அடங்கி பவ்யமாக இருக்கிறார்களே? பக்தி பரவசத்தால் அவர்களுக்கு கண்ணீர் ததும்புகிறதே? வேறெந்த நாட்டிலும் இப்படி ஒரு தெய்வீக நிலையைக் காண முடியாது. காஞ்சிப்பெரியவர் போன்ற மகான்களும் வேறெங்கும் இருக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்தார்.
அதிகாரி தனது நாட்குறிப்பில், ”சுவாமிகளின் மீது போராட்ட வீரர்கள் கொண்டிருந்த அன்பு, பக்தியை நேரில் கண்டேன். நானும் அவர்களுடன் சுவாமிகளை தரிசித்தேன். இனி அன்புவழியே என் வழி; வன்முறை என் வழியல்ல” என எழுதினார்.