திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் - ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில்களின் தேர்த்திருவிழாவில் நேற்று மூன்று வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. திருப்பூரில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் - வீரராகவப் பெருமாள் கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமிகள் திருவீதியுலா ஆகியன நடந்தன.
தேர்த்திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை ஆகியன நடந்தன. தொடர்ந்து மாலை, சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. சோமாஸ்கந்தர், ராவணேஸ்வரர் வாகனத்தில் எழுந்தருளினர். காமதேனு வாகனத்தில் விசாலாட்சி அம்மனும், சஷே வாகனத்தில் பூமா தேவி, ஸ்ரீ தேவியருடன் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில், நான்காம் நாளான இன்று, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியனவும், மாலை 6:30 மணிக்கு கற்பக விருட்ஷ வாகனம், அதிகார நந்தி வாகனம் மற்றும் யாழி வாகனங்கள் மீது உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.