பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
04:06
சிவலிங்க வகைகளில் கல் லிங்கம் மண்லிங்கம் சொர்ணலிங்கம், வெள்ளி லிங்கம், மரகத லிங்கம், சந்திரகாந்தக்கல் லிங்கம், ஸ்படிக லிங்கம் என்று பலவகை இருந்தாலும் மிகவும் போற்றப்படுவது "பாதரசலிங்கம். இதனை ரசலிங்கம் என்றும் சொல்வர். கோடிக்கணக்கான லிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை விட ஒரு பாதரச லிங்கத்தினை வழிபடுவதன்மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெறமுடியும். "யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தினைப் பூஜித்துப் பரமபதத்தினை அடையலாம். பாதரசலிங்கத்தை விதிப்படி ஒரே ஒருமுறை பூஜிப்பவர்கள் கூட சூரிய - சந்திரர்கள் இருக்கும்வரை அளவில்லாத சுகத்தையும் ஆரோக்கியமான நல்வாழ்வினையும் பெறமுடியும் என்று பிரம்ம புராணம் கூறுகிறது. கல்லால் ஆன சிவலிங்கத்தைப் பூஜிப்பதைவிட, கோடி மடங்கு நற்பலன்களைத் தங்கம் வேயப்பட்ட சிவ லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பல ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும். ஆனால், அதைவிட பலப்பல மடங்குகள் பலன்களை பாதரசலிங்கத்தினைத் தரிசித்து வழிபடுவதால் பெற இயலும் என்று கூறுகின்றனர்.
பாதரசம் நிலையில்லாமல் அசையும் சக்திவாய்ந்த ஒரு திரவம். அதனை ஒரு நிலைப்படுத்த வேண்டுமென்றால், அத்துடன் அரிய தெய்வீக மூலிகைகளின் சாற்றினைக் கலந்து திடப் பொருளாக்கி, சிவலிங்கமாக உருவாக்க வேண்டும். அந்த அற்புதக் கலையை நன்கு அறிந்தவர்கள் முக்காலும் உணர்ந்த முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் ஆவர். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம், மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதைப் பெறுவதற்கான ஒரே சிறந்தவழி பாதரச லிங்கத்தைவழிபடுவதால் கிட்டும் என்கிறது வாய்விய சம்ஹிதை என்ற வேதநூல். பிரசித்தி பெற்ற ஆயிரம் லிங்கங்களைத் தரிசித்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதைவிட, ஒரே ஒருமுறை பாதரச லிங்கத்தை வழிபடுவதால் வாழ்க்கையில் அனைத்துப் பலன்களும் கிட்டுவதுடன், இறுதிக் காலத்தில் சிவலோகத்திலும் ஒரு பதவி கிடைக்கும். தினந்தோறும் அனுஷ்டானங்கள் மேற்கொண்டு, பூஜை, அர்ச்சனை, மந்திரங்கள் ஜபித்து, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக் கூடியவர்கள் மட்டும், பாதரச லிங்கத்தை வீட்டில் பூஜை அறையில் நிறுவி வழிபடலாம்.
புத்துயிரும், புது இளமையும் தரும் பாதரச லிங்கம் உள்ள கோயில்கள் இந்தியாவில் ஒருசில இடங்களில் மட்டுமே உள்ளன.. தமிழகத்தில் கரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பாதரசலிங்கம் உள்ளது. இக்கோயில் இறைவன் பசுபதீஸ்வரர் - அம்பாள் சவுந்தரநாயகி என்னும் அலங்கார நாயகி. சென்னை வட திருமுல்லைவாயில் மாசில்லா மணீஸ்வரர் கோயிலில் பாதரசலிங்கத்தைத் தரிசிக்கலாம். இத்தல இறைவன் மாசில்லா மணீஸ்வரர். இறைவி கொடியிடைநாயகி. அடுத்து கோயம்புத்தூரில் அமைந்துள்ள தியான லிங்கம் (ஈஷா) வழிபாட்டுத் தலத்திலும் பாதரசலிங்கம் வழிபாடு நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும், தெலுங்கானாவில் திராக்ஷா ராமம் கோயிலிலும், ஒரிஸ்ஸாவில் பரதீஸ்வரர் கோயிலிலும், உஜ்ஜைனி தலத்தில் உள்ள "சித்தா ஆசிரமத்திலும் பாதரசலிங்கம் உள்ளது. பாதரசத்தினை "சிவதாது என்று சித்தர்கள் சொல்வர். இது "ஆண் இனத்தைக் குறிக்கும் சொல். அதாவது சிவபெருமானைக் குறிக்கும். சித்தர்கள் இதனுடன் அரிய மூலிகைச் சாற்றினைக் கலந்து திடப்பொருள் ஆக்குவர். "மூலிகைச் சாறு பெண்ணினத்தைக்குறிக்கும். அதாவது, "சக்தி கவுரி எனப்படுகிறது. இந்த இரண்டும் கலந்தால்தான் "பாதரசலிங்கம் உருவாக்க முடியும்.
பாதரசலிங்கத்தினை வழிபடுவதால் மனம் அலைபாயாது மற்றும் பதினாறும் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழலாம். பாதரசலிங்கம் எழுந்தருளியுள்ள கோயிலிற்குச் சென்று வழிபட்டால், இறுதிக் காலத்தில் எமவேதனைகள் இன்றி சுகமுடன் முக்தி கிட்டும். பாதரச லிங்கத்தினைத் தொடர்ந்து வழிபடுபவர்கள் அல்லது வீட்டில் பூஜை அறையில் எழுந்தருளச் செய்து பூஜிப்பவர்கள் உடல் தூய்மை, உள்ளத் தூய்மை இரண்டையும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். சிவபூஜை செய்யும் பொழுதும், தியானம் செய்யும் பொழுதும், திருமுறைகள் படிக்கும் பொழுதும், பஞ்சாட்சரம் சொல்லும் பொழுதும் சித்தாந்தம் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும், பஞ்சாட்சரத்தை ஜபிக்கும் பொழுதும் மனதை ஒருநிலைப்படுத்தி வழிபட்டால் முக்காலமும் அறியும் சக்தி கிடைக்கும். மேலும், உணவில் கட்டுப்பாடு கடைப் பிடித்தல் அவசியமாகும். வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று அளவுக்கு மீறி உண்பதைத் தவிர்த்தல் நலம் தரும். பொய், கோபம், பொறாமை, வஞ்சம், சூது, வாது இவற்றை அறவே நீக்கிடல் வேண்டும். இனிய சொற்களைத்தான் பேசவேண்டும். யாராவது ஒருவர் தங்கள் குறைகளைச் சொன்னால் கனிவுடன் கேட்டு, அதற்குரிய நல்ல பரிகாரத்தைச் சொல்ல வேண்டும். பிறர்மனம் புண்படும்படிப் பேசுதல், கேலிபேசுதல், நையாண்டி செய்தல் கூடாது. பெண்களை வக்கிர எண்ணங்களுடன் பார்த்தல், மனதிற்குள் ரசித்தல் போன்ற குணங்கள் பாதரலிங்கத்தினை வழிபடுவதால் நீங்கும். மன அழுக்குகள் நீங்கித் தூய்மையை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. எனவே, பாதரச லிங்கம் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் சென்று முடிந்த அளவு அங்கு அமர்ந்து தியானம் செய்து, வழிபட்டால் என்றும் வாழ்வில் சுகம் காணலாம்.