முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். சூரபதுமனை அன்னை தந்த வேலால் சம்ஹாரம் செய்து, செந்தூர்ப்பதியிலே முருகப்பெருமான் கோயில் கொண்டார். அப்போது தேவர்களும் மூவர்களும் அவரை வினைதீர்த்த பெருமான் என்று போற்றி வணங்கினர். சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அவர்களும் குமரனையும் அம்மையப்பரையும் வணங்கி வேண்டினர். கார்த்திகைப் பெண்களது தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களுக்கு வரம் அளித்தார் இறைவன்.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையில் முருகப்பெருமானை வணங்கி விரதமிருந்து வழிபடுவர்களுக்கு இப்பூவுலக வாழ்க்கைக்குத் தேவையான அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அளிப்பதோடு, அவ்வுலக மோட்சமும் கிட்டும் என்று அருளினார். அன்றிலிருந்து ஆடிக்கிருத்திகை மிகவும் சிறப்பான விரதமாகக் கொண்டாடப்படுகிறது.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயண துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கிருத்திகை.
இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவே எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். மனத் துய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.