சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு உண்டியல் மூலம் 9.71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, மகா மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறை கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் திறக்கப்பட்டன. சுய உதவிக் குழு பெண்கள், எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் காணிக்கையாக 9,71,366 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் 31 கிராம், வெள்ளி பொருள்கள் 128 கிராம், பல ஆயிரம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. இந்த தொகை சிதம்பரம் பேங்க் ஆப் இந்தியாவில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த வருவாய் மூன்று மாதங்களில் கிடைக்கப் பெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், சரக ஆய்வாளர்கள் சிதம்பரம் (பொறுப்பு) சீனிவாசன், கோவில் மேலாளர் வாசு, அலுவலர்கள் ராஜ்குமார், ராமலிங்கம், மணிகண்டன் பங்கேற்றனர்.