பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
01:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர் என, உற்சவ ஆச்சாரியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா குறித்து பாஸ்கர தீட்சிதர் கூறியதாவது:சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சன மகோற்சவம் வரும் 27ம் தேதி விக்னேஸ்வரபூஜையுடன் துவங்குகிறது. 29ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு அம்பாள் சிறப்பு வாகன புறப்பாடு செய்யப்படுகிறது. ஜூலை 3ம் தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆனித் திருமஞ்சனம் சிற்சபை பிரவேச தரிசனம் நடக்கிறது. இதனையொட்டி கோவி லில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வெயில் அதிகமாக இருப்பதால் நான்கு சன்னதி வீதிகள் மற்றும் கோவில் வெளி பிரகாரத்தில் பந்தல் அமைக்கப்படும்.
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தண்டபாணி தீட்சிதர், நடராஜ சுப்ரமணிய தீட்சிதர், குஞ்சிதபாதம் தீட்சிதர் உடனிருந்தனர்.