பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
12:07
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்துாரில் ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோயில், கேட்ட வரம் தரும் அம்பிகை வீரமாகாளியம்மன் கோயிலில் ஆனி மாத முப்பழ அபிஷேக திருவிழா நடந்தது. சேத்துாருக்கு மேற்கே 5 கி.மீ., தூரத்தில் கொல்லுாரணி தாமரை பொய்கை கரையில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆதிபுத்திரகொண்ட அய்யனார், கேட்டவரம் தரும் அம்பிகையான வீரமாகாளியம்மன், மாயாண்டி, மகாலட்சுமி, மாடசாமி, மாடத்தி, இருப்பசாமி, பாதாள கண்டியம்மன், ராக்சக்திஅம்மன், கன்னி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்கள் உள்ளனர்.
தமிழகத்திலுள்ள அய்யனார் கோயில்களிலேயே சைவ கோயிலாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் முப்பழ திருவிழா நடப்பது வழக்கம். கடந்த வியாழன் கிழமை இரவு 226 விளக்கு பூஜை பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. 2 வது நாளான நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இரவு 12:00 மணிக்கு மேல் பால், தயிர், நெய், விபூதி, குங்குமம், இளநீர், கும்பநீர் உட்பட 21 வகையான பொருட்கள் மற்றும் மா, பலா, வாழை அடங்கிய முப்பழ அபிஷேகம் நடந்தது. அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைக்கு பின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.