தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேன் அபிஷேகமும் இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடந்தது. கடந்த 12ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் அதைத் தொடர்ந்து 14ம் தேதி திருத்தேரோட்டமும் நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் நேற்று இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கொண்டு சுவாமியை வழிபட்டனர். நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். செங்குந்த முதலியார் வகையறாவினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.