பதிவு செய்த நாள்
25
ஆக
2019
03:08
சென்னை:தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து, முக்கிய கோவில்களில், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ல், கொண்டாடப்பட உள்ளது. அன்று தினம், கோவில்களில் தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா என்ற, பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானில் இருந்து ஒருவர், இலங்கையிலிருந்து ஐவர், என, ஆறு பயங்கரவாதிகள், கோவைக்குள் ஊடுருவி உள்ளதாகவும், எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி, தமிழக போலீசாரையும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாநிலம் முழுவதும், முக்கிய கோவில்களில், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர், கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
● அனைத்து கோவில்களிலும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் உதவி பெற்று, கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
● இரவு காவலர்கள், பணியில் உள்ளனரா; அவர்கள் முறையாக பணிபுரிகின்றனரா என, கோவில் செயல் அலுவலர்கள், திடீர் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
● பாதுகாப்பு தொடர்பான விபரத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.