கோவாவில் மார்ஷோல் என்ற ஊரில் ராவல்நாத் என்னுமிடத்தில் கிருஷ்ணர் குழந்தையாக, அன்னை தேவகியின் மடியில் அமர்ந்த கோலத்தில் தேவகி கிருஷ்ணா என்ற திரு நாமத்துடன் அருள்புரிகிறார். இது வேறெங்கும் காணக்கிடைக்காத சொரூபம்! முருகனுக்கு அறுபடை வீடுகள் போல் கிருஷ்ணருக்கும் திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை என பஞ்சஸ்தலங்கள் உண்டு. ஹரித்வாரில் உள்ள சண்டிதேவி கோயிலுக்கு அருகில் ஆஞ்சனேயரின் அன்னை அஞ்சனாதேவிக்கு தனிக்கோயில் உள்ளது. அழகுக் குழந்தை அனுமனை மடியில் கிடத்தி அன்னை பால் அமுது ஊட்டும் விக்ரகம் இக்கோயிலில் விசேஷம்! பரசுராமர் ஸ்தாபித்த கோயில்கள் ஐந்து, அவை கர்நாடகாவில் கொல்லூர் மூகாம்பிகை, கேரளாவின் வடக்ரா லோகாம்பிகை, பாலக்காடு ஹேமாம்பிகை, கொடுங்கல்லூர் மகாபகவதி மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி.