பதிவு செய்த நாள்
08
அக்
2019
04:10
குன்னூர்: அருவங்காடு பெங்காளி இன மக்களின், துர்கா பூஜை விழா பாரம்பரிய செந்தூர் திருவிழாவுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆண்டுதோறும் நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு சார்பில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 58-வது ஆண்டு நவராத்திரி துர்கா பூஜை விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. விழாவை தொழிற்சாலை பொது மேலாளர் பி.கே. சிங், தீப்ஷிகா குழு தலைவி ரேணுகா சிங் துவக்கி வைத்தனர். தொடர்ந்து தினமும் மகா சப்தமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி, அன்னதானம், சந்தியா ஆரத்தி, இன்னிசை நிகழ்ச்சி, பஜனை உட்பட கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பிரபஞ்சம் அனைத்தும் அம்மனின் காலடியில் அடக்கம் என்பதை குறிக்கும் வகையில், அம்மனின் கால் பாதத்தை கண்ணாடியில் பார்த்து பக்தர்கள் வழிபடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிறகு, சுமங்கலி பூஜையில், அம்மனுக்கு செந்தூரம் திலகமிட்டு, பூஜைகளை, மகளிரே நடத்தி வழிபட்டனர். மாலையில், இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. அமைப்பின் செயலாளர் அஜித்குமார் டரப்தார் கூறுகையில், "கல்கத்தா, மைசூர், கோவை உள்ளிட்ட இடங்களில் துர்கா பூஜை நடத்தப்படுகின். நீலகிரியில் பெங்காளி கலாசார நிகழ்ச்சிகளுடன் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. மண் மற்றும் ஓலைகள் உட்பட இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டு, ஆர்கானிக் வண்ணங்கள் தீட்டப்பட்டன. " என்றார். விழா ஏற்பாடுகளை, நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பெங்காளி இன மக்கள் செய்திருந்தனர்.