பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். புனித வெள்ளியன்று, சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஏசு கிறிஸ்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவமான ஈஸ்டர் பண்டிகை, சிறப்புக் கூட்டு பாடல் திருப்பலி, நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்தது. நேற்று முன் தினம் இரவு 10.45 மணிக்கு, தேவாலய அதிபர் மைக்கேல், பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட, 25 பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்புப் பாடல் திருப்பலி, தேவாலய கலையரங்கில் துவங்கியது. இரவு 12 மணிக்கு, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி, பக்தர்களுக்கு தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது. நள்ளிரவு 1.45 மணி வரை நடந்த சிறப்புத் திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். நேற்று மாலை 6.30 மணிக்கு உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து திருத்தேர் பவனி, தேவாலயத்தில் நடந்தது.