மதுரையில் திருமலை நாயக்கரிடம் மந்திரியாக இருந்தவர் ஐயா தீட்சிதர் என்னும் நீலகண்ட தீட்சிதர். இவர் பாடிய சிவ லீலார்ணவம் என்னும் பாடலில் மீனாட்சியின் சிறப்பை கூறியுள்ளார். “உலகம் அழியும் காலத்தில் தோன்றும் வெள்ளத்தில் சிக்கிய வேதங்களை மீட்க விஷ்ணு மச்சமாக (மீனாக) அவதரித்தார். ஆனால், மீன் போன்ற அழகிய கண்களைப் பெற்ற அங்கயற்கண்ணியின் திருவடிகளைத் தான் அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது,” என போற்றுகிறார். மீனாட்சி மீது இவர் பாடிய ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் ஸ்தோத்திரமும் புகழ் மிக்கது. பார்வை இழந்த இவர், இதைப் பாடி மீனாட்சி அருளால் கண்ணொளி பெற்றார். மீனாட்சி என்பதை தமிழில் அங்கயற்கண்ணி என்று குறிப்பிடுவர். இதற்கு அழகிய மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என பொருள். மதுரையில் பிறந்த பெண் குழந்தைகளை மீனாட்சியின் அம்சமாக அங்கச்சி என அழைப்பது வழக்கம். அங்கயற்கண்ணி என்பதை சுருக்கியே அங்கச்சி என்கின்றனர்.