ஒருசமயம், திருநபி(ஸல்) அவர்களுடைய மஸ்ஜிதில் ஓர் அரபி வந்து நுழைந்து, “நாயகனே! நான் உன்னிடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன் இன்னும் உன்னளவில் பாவமன்னிப்புத் தேடி மீளுகிறேன்,” என்று சொன்னவராக தக்பீர் கட்டித் தொழுதார். அவர் தொழுது முடிந்த பின் சையதினா அலி(ரலி) அவர்கள் அன்னாரைப் பார்த்து, “ஏ நண்பரே! உம்முடைய நாவிலிருந்து நிரம்ப விரைவாக பாவமன்னிப்பு வெளியாகிறதே! இது பொய்யர்களுடைய பாவமன்னிப்பாக இருக்கும். ஆகவே, உம்முடைய இந்த பாவமன்னிப்பும் இன்னுமொரு பாவ மன்னிப்பளவில் ஹாஜத்தாகிறது” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அந்த அரபி திடுக்கிட்டவராய் “ விசுவாசிகளின் அதிபரே! பாவமன்னிப்பு செய்ய வேண்டிய முறை எதுவாகயிருக்கும்? அதை எனக்கு அறிவியுங்கள்” எனப் பணிந்து வேண்டினார். அதற்கு அலி(ரலி) அவர்கள், பாவ மன்னிப்பென்னும் இறை வழிபாடு ஆறு அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளதுஎன அவருக்கு அறிவுரை பகர்ந்தார்கள். ஒன்றாவது, செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்துவது. இரண்டாவது, விடப்பட்ட கடமையான வணக்கங்களை தொடர்படியாய் நிறைவேற்றுவதை உறுதி செய்து கொள்வது. மூன்றாவது அநீதியாக வந்த பொருள் அனைத்தையும் திருப்பிக் கொடுப்பது. நான்காவது தன்னுடைய எண்ணங்களைப் பாவத்தில் சென்றிடாது தடுத்துக் கொள்வது. அதை நேர்வழியில் பழக்குவதும் இதில் சேர்ந்ததாகும். ஐந்தாவது, பாவம் செய்வதில் இன்பம் காணுவதை நமது விரோதியான ஷைத்தான் நமக்கு மத்தியில் அழகாய் காட்டுவதிலிருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது. (இறைவனை வழிபடுவதைக் கசப்பாயும் வெறுப்பாயும் ஷைத்தான் காட்டினாலும், அதில் சுவையிருப்பதாய் கருத்தில் கொண்டு இறைவனை வழிபட வேண்டும்) ஆறாவது பாவத்தின் பேரில் நீர் சிரித்த ஒவ்வொரு சிரிப்பிற்கும் (ஆனந்தத்திற்கும்) பதிலாக இறை தண்டனையை எண்ணி அழுவது” என மொழிந்தார்கள். இதனைக் கேட்ட அரபி, அறிவுரையை ஏற்றுக் கொண்டார்.