எழுமலை; எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் ஆலய சித்திரை திருவிழாவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருவேங்கடப்பெருமாள் சீர் வழங்கும் நிகழ்வும், எதிர்சேவை நிகழ்ச்சிக்காக, சுவாமிகள் புறப்பட்டு எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர்.
தமிழகத்தில் சைவம், வைணவ பாகுபாடு இல்லாமல் இணைந்து வழிபாடு நடத்தும் விதமாக பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக எழுமலையில் மாதாந்திர சுப்பிரமணியர் ஆலய சித்திரை திருவிழாவில் திருவேங்கடபெருமாள் சீர் வழங்குதல், எதிர்சேவை வழிபாடு நடக்கிறது. இன்று காலை 9.00 மணியளவில் மாதாந்திர சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் புறப்பட்டு எழுமலை ராஜகணபதி கோயில் அருகே மண்டகப்படிக்கும், திருவேங்கடப்பெருமாள்கோயிலில் இருந்து புறப்பட்டு ராஜகணபதி கோயில் மண்டகப்படிக்கும் எழுந்தருளினர். இரவு முழுவதும் மண்டகப்படியில் தங்கி பெருமாளும், சுப்பிரமணியரும் பக்தர்களுக்கு காட்சி தருவர். நாளை மே 13 காலை 9.30 மணியளவில் பெருமாளிடம் இருந்து மாலை மரியாதை உள்ளிட்ட சீர்வரிசை சுப்பிரமணியருக்கு வழங்கப்பட்ட பின் இருவரும் புறப்பாடாகி நகர் வலமாக சென்று எழுமலை பெரிய கண்மாய் பகுதியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சுப்பிரமணியரும், பெருமாளும் தங்கள் கோயில்களுக்கு செல்வார்கள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.