உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு சகஸ்ர லிங்கம் சன்னதி மற்றும் அக்னி தீர்த்தம் அருகே உள்ள 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரத்தின் அருகில் மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசரின் பாதுகை அமைந்துள்ளது. ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கொண்டாடக்கூடிய குரு பூர்ணிமா விழாவில் வேத வியாசரின் பாதரட்சை (காலணி) அமைந்துள்ள பீடத்திற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பானகம், பச்சை பயறு, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இலந்தை மரத்தின் அடியில் பாதுகாக்கப்படும் வியாசரின் பாதரட்சைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். உத்தரகோசமங்கை கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பழமை வாய்ந்த இலந்தை மரத்தின் சிறப்புகளையும் அதில் வைக்கப்பட்டுள்ள பாதுகையும், ஸ்தல புராண வரலாற்றையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.