சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை தரிசித்தனர். ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில், ஜூலை 4 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. அன்று மாலை பக்தர்கள் கோயில் முன் பூக்குழி இறங்கியும், பூக்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூச்சொரிதல் விழாவில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஜூலை 9 ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. எட்டாம் நாளான நேற்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அம்மன் இன்று முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் கையில் குழந்தையுடன் எழுந்தருளினார். இன்று மாலை முதல் இரவு வரை ஏராளமான பெண்கள் பல்வேறு கோயில்களில் இருந்து பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வந்தனர். அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காளியம்மனை தரிசனம் செய்தனர். கூடுதல் எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி.,க்கள் சிவகங்கை அமலஅட்வின், புருேஷாத்தமன், ஞானராஜ் ஆகியோர் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.