Special supplement · Part 1 · page 25 · 9 / 159
‘திருஆலவாய்’ ஆன காரணம்
வங்கியசேகர பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் கடும்மழை பெய்தது. இதனால் மதுரை நகரமே வெள்ளம் சூழ எல்லைகள் தெரியவில்லை. மீண்டும் நகரை சீரமைக்க எண்ணிய மன்னன், மதுரையின் எல்லையைக் காட்டி அருளும்படி சொக்கநாதரிடம் வேண்டினார். அவருக்கு அருள எண்ணிய சொக்கநாதர் ஆலவாய் எனப்படும் பாம்பிற்கு உத்தரவிட்டார். அது இத்தலத்தில் தன்னுடைய வாயையும், வாலையும் ஒன்று சேர்த்து நகரைச் சுற்றி எல்லையைக் காட்டியது. இவ்விடத்தில் சிவபெருமான் எழுந்தருளினார். ஆலவாய் என்னும் பாம்பினால் இங்கிருந்து எல்லை காட்டியதால் இத்தலம் ‘திருஆலவாய்’ என்றும், சிவபெருமான், ‘திருஆலவாயர்’ என்றும் பெயர் பெற்றார். ஒரு கட்டடமோ, வீடோ அமைக்க வேண்டுமெனில் இன்ஜினியர் வரைபடம் போட்டுத் தருவார். மதுரை நகரம் உருவாக வரைபடம் அளித்தவர் யார் தெரியுமா? மதுரையை ஆளும் சொக்கநாதர் தான். குலசேகர பாண்டிய மன்னனுக்கு மதுரை நகரை எப்படி அமைப்பது எனத் தெரியாமல் குழம்பினான். தீர்வு வேண்டி சொக்கநாதரை வழிபட்டான். அப்போது சித்தர் வடிவில் வந்த சொக்கநாதர், கோயிலை தாமரை மொட்டாகவும், அதைச் சுற்றி அமையும் வீதிகளை இதழ்களாகவும் கருதி நகரை உருவாக்க வழிகாட்டினார். இதனடிப்படையில் சொக்கநாதரை உலகின் முதல் இன்ஜினியர் என்றால் மிகையில்லை.