பதிவு செய்த நாள்
24
ஜூன்
2026
10:06
ஸ்ரீரங்கபட்டணா அருகில் கட்டப்பட்டு உள்ள ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவிலில் நாளை நுாதன கும்பாபிஷேகம் நடக்கிறது.
தமிழகம் திருச்சிராப்பள்ளி காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் போன்று, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவின் பாபுராயனகொப்பலுவில் காவிரி நிதிக்கரையில் ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா, தனது ஸ்துால குரு கைலாஷ் ஆசிரம ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ திருச்சி மஹா சுவாமிகளின் வழிகாட்டுதல்படி, ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி மற்றும் லோகபாவனி நதிகள் சங்கமிக்கும் இடத்தில், திருச்சி சமயபுரம் கோவில் அமைப்பு போன்று கட்டப்பட்டு உள்ளது.
5 நிலை கோபுரம் ஆகம விதிகளின்படி, திராவிட கட்டடக்கலை நுட்பத்தில் கருங்கல்லால் கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டு, 15 ஆண்டுகளாக தனது தவத்தாலும், உழைப்பாலும் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில், 5 நிலை கோபுரத்துடன் கோவில் உருவாகி உள்ளது.
மூன்றரை ஏக்கரில் மூன்று பிரகாரங்கள், 50 துாண்கள், ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உட்பட ஐந்து கோபுரங்கள் கட்டப்பட்டு உள்ளன.
52 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் இருபுறமும் காளி, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கருவறையில் அம்மனின் சிலை, சுதை ரூபத்தில் எட்டு அடி உயரத்தில் புனித மண், எலுமிச்சை, 108 மருத்துவ மூலிகைகள், நாட்டின் முக்கிய நதிகளின் தீர்த்தத்தால் மூலஸ்தானத்தில் வைத்தே வடிவமைக்கப்பட்டு உள்ளது. கருவறையில் உள்ள அம்மனை சுற்றிலும், அஷ்ட மாரியம்மன்கள், அஷ்ட மஹா துர்கைகள், அஷ்ட துர்கைகள், அஷ்ட லட்சுமிகளின் விகரஹங்கள் என 38 பிரமாண்டமான துாண்களில் செதுக்கப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக மூன்றாவது பிரகாரம் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன. கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் ஈசான மூலையில் விநாயகர் உள்ளார். கருவறையின் பின்புறம் அம்மனின் உற்சவமூர்த்தி, அபிஷேக மூர்த்தி எழுந்தருளி உள்ளனர். மேலும் கருப்பண்ணசாமியின் விக்ரகமும் அமையவுள்ளது.
10வது தலைமுறை திருச்சி சமயபுரம் மாரியம்மன் சிலையை வடிவமைத்த ஸ்பதியின் 10வது தலைமுறையை சேர்ந்த ஸ்தபதியே, இச்சிலையையும் வடிவமைத்துள்ளார். முதலில் அம்மனின் எலும்பு அமைப்பை, ஒத்த செம்பு கம்பிகளின் வலை பின்னல் அமைக்கப்படுகிறது. பின், நாட்டின் புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்தத்தை கொண்டு, 108 மூலிகைகளின் சாறு, மணல், சுண்ணாம்பு, சிறு செங்கற்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அம்மன் சிலை அமைக்கும் போது, மென்மையான தோலை தொடும் உணர்வு ஏற்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 28 நாட்கள் மக்கள் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பார். அப்போது அம்மனை சாந்தப்படுத்துவதற்காக பூ சொரிதல் எனும் மலர் சொரிதல் விமரிசையாக நடக்கும். கோவில் வளாகத்தில் சுவாமிகளின் ஆசிரமம், ஆச்சார்யார்கள், அர்ச்சகர்கள் தங்க தங்குமிடம், கோ சாலை, கோவிலுக்குள் தேவி மண்டபம், அன்னதான கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் வேத பாட சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ திருச்சி ஞானதேசிக மஹா சுவாமிகள் ஆசிர்வாதத்துடனும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர புரி மஹா சுவாமிகள் தலைமையில், ஸ்ரீ சதாசிவபுரி பகவத்பாதாச்சார்ய சுவாமி ஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா சங்கல்பத்தின்படி, கடந்த 18 ம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. முதல் கால பூஜை 22ம் தேதி மாலையும், 23ல் இரண்டு கால பூஜைகள் நடந்தன.
நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. பல்லக்கில் உற்சவர் சமயபுரம் மாரியம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். யாக குண்டங்கள் அமைத்து பூஜை@@subboxhd@@ இன்று சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரத்ன நியாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல்; மாலையில் சிறப்பு சாந்தி, யாக பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக் ஷா பந்தனம், அம்மன் நேத்ரம் உம்மீலனம் எனும் கண்கள் திறப்பு, பிம்மசுத்தி; இன்று இரண்டு கால பூஜைகள்;
நாளை அதிகாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தனம், ஸ்பர்ஷாஹூதி, பிராயச்சித்தாஹூதி, மஹா பூர்ணாஹூதி, மூர்த்தி சமயோஜனம், கலசம் புறப்பாடு நடக்கிறது. காலை 9:45 முதல் 10:30 மணிக்குள், மயிலாடுதுறையை சேர்ந்த 92 வயதுள்ள சபேச குருக்கள் தலைமையில் விமான, ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் நடக்கிறது. மாலையில் அம்மனின் புஷ்ப பல்லக்கு புறப்படுகிறது. நாளை (25ம் தேதி) காலை ஒரு கால பூஜை நடக்கிறது.
கும்பாபிஷேகத்துக்காக 33 யாக குண்டம் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகம், கர்நாடகாவில் இருந்து 92 ஆச்சார்யார்கள் இதில் பங்கேற்கின்றனர். நாட்டின் பல்வேறு கோவில்களை சேர்ந்த மடாதிபதிகளும் வருகை தருகின்றனர். கும்பாபிஷேகத்துக்கு பின், 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடக்கிறது.
எப்படி செல்வது? இக்கும்பாபிஷேகத்தில் ப ங்கேற்க விரும்பும் பக்தர்கள், பஸ்கள், ரயில்கள் மூலம் வரலாம். மைசூரு சந்திப்பு, ஸ்ரீரங்கபட்டணா ரயில் நிலையம், பாண்டவபுரா ரயில் நிலையத்தில் இறங்கி, கோவிலுக்கு வரலாம். பக்தர்கள் தங்க இடவசதியும் செய்யப்பட்டு உள்ளது.
அருகிலுள்ள கோவில்கள்: ஸ்ரீரங்கநாதர் கோவில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில், ஸ்ரீநிமிஷாம்பா கோவில். – நமது நிருபர் –: