பதிவு செய்த நாள்
14
ஜூலை
2026
08:07
ராமேஸ்வரம்; சனாதனம் குறித்து மக்களிடம் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என கிராம கோயில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார். ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நடந்த கிராம கோயில் பூசாரிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவரும், கிராம கோயில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமை வகித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது : சர்ச், மசூதியில் கிடைக்கும் காணிக்கை, வருவாயை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் ஹிந்து கோயில் உண்டியலில் குவியும் கோடிக்கணக்கான காணிக்கை, தங்கம் , வெள்ளியை தமிழக அரசு வங்கியில் டெபாசிட் செய்துள்ளது. கோயில் வருவாயை பக்தர்கள், மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து கொடுப்பதில்லை. அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் சம்பளம், சலுகை வழங்காமல் முடக்கி வைத்துள்ளதால், பூசாரிகள் நலிவடைந்து உள்ளனர். இதனால் கிராம கோயில்களில் பூஜைகள், சடங்குகள் எப்படி நன்றாக நடக்கும். எனவே பூசாரிகளுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை அரசு துரிதமாக வழங்கிட வேண்டும்.
மதமாற்ற சக்திகளை தடுத்து, பிற மதத்தில் உள்ள நம் உறவுகளை தாய் மதத்திற்கு திரும்ப பூசாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதனம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பாரம்பரியமான குலதெய்வ வழிபாடு, சடங்கு முறைகள் அதன் பயன்பாடு குறித்து மக்களிடம் விளக்கி பேசுங்கள் என்றார்.