திருப்புறம்பயம் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2026 12:09
தஞ்சாவூர்; திருப்புறம்பயம் ஸ்ரீசாட்சிநாத சுவாமி கோவிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய தேனபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அருகே திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை உடனாகிய சாட்சிநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தேனபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று (14ம்தேதி) விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மாலை தேன் அபிஷேகம் தொடங்கி விடிய விடிய நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு விநாயக பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் இன்னிசை நிகழ்ச்சிகள், நாட்டிய அரங்கம், வாழ்த்தரங்கம், பட்டி மன்றம் உள்ளிட்டவை நடந்தது. ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் 293வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஆணைப்படி, காறுபாறு ஸ்ரீமத். சொக்கநாத தம்பிரான் மற்றும் தேனபிஷேக விழாக்குழுவினர் செய்திருந்தனர். இக்கோவிலில் நத்தைகூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல் பொருட்களாலான மேனியைக் கொண்டவராகப் பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி தினத்தில் மட்டுமே தேனபிஷேம் நடக்கிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் திருமேனியில் உறிஞ்சப்பட்டு விநாயகர் செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.