பதிவு செய்த நாள்
02
டிச
2013
11:12
பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சிவன் மற்றும் நரசிம்மர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்புற கோவில்களில் சிவன் மற்றும் நரசிம்மருக்கு நேற்றுமுன் தினம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 29ம் தேதி, விஷ்வக்சேனர் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. மேலும், வாசுதேவ புண்யாகாஜனம், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மூல மந்திரங்கள் ஜபம், சாற்றுமறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை 4.00 மணிக்கு தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. அலங்கார நைவேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. வால்பாறை: வால்பாறை காசிவிஸ்வநாதர் கோவிலில் நடந்த, சனிப்பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாதம் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு வருகிறது. இதில், ஆண்டில் இரண்டு முறை சனிக்கிழமையன்று வருகிறது. சனிக்கிழமையன்று வரும் இவ்வழிபாட்டிற்கு சிறப்புகள் அதிகம் என்பதால், பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கும், நந்திக்கும் இதையொடடி, ஒரே சமயத்தில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவபெருமான், நந்தி, துர்க்கை அம்மனுக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து , பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வால்பாறை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். -நமது நிருபர் குழு-