பதிவு செய்த நாள்
20
மார்
2014
12:03
சத்தியமங்கலம்: பெரியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் அருகே உள்ளது பெரியூர். இங்குள்ள, மாகாளியம்மன் கோவில் பிரசித்த பெற்றது. இங்கு பங்குனி மாதம், குண்டம் விழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு குண்டம் விழா கடந்த, நான்காம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதையடுத்து, 11ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியும், 15ம் தேதி கொடியேற்றமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, கோவில் முன் அமைக்கப்பட்ட, 60 அடியில் வேம்பு மற்றும் ஊஞ்சல் மரங்களை வைத்து, தீ மூட்டி, அக்னி வளர்க்கப்பட்டது. பின் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், கோவில் பூசாரி முதலில் தீ மிதித்தார். தொடர்ந்து, விரதம் இருந்த பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். அதற்கு பின் கால்நடைகள் தீ மிதித்தன.நேற்று இரவு, கோவில் தேர் வடம் பிடித்து இழுத்தனர். வரும், 25ம் தேதி மறுபூஜையுடன், குண்டம் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர் துரைசாமி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.