பதிவு செய்த நாள்
28
மே
2015
12:05
விருதுநகர்: சதுரகிரி வனப்பகுதியை பாதுகாக்க மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த,அவர்களுக்கு வனத்துறையினர் பயிற்சியளிக்க உள்ளனர். விருதுநகர், மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோயிலுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன் வரை ஆடி, தை அமாவாசை விழா காலங்களில் மட்டுமே பக்தர்கள் சென்று வந்தனர். தற்போது மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சனி,ஞாயிறு, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இக்கோயில் ஸ்ரீவில்லிபுத்துõர் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. மான், யானை, காட்டுமாடு,மிளா, வரையாடு உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையால் வன விலங்குகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் வரை இக்கோயில் செல்லும் பாதையில் அதிகளவில் யானை உட்பட பல விலங்குகள் வந்து சென்றன. தற்போது மனிதர்கள் நடமாட்டம் அதிகமானதால் இந்த வனப்பகுதியில் விலங்குகள் வருவது குறைந்து வேறு இடங்களுக்குள் சென்று விட்டன. சதுரகிரி மலை வனப்பகுதி விலங்குகளை பாதுகாக்க பக்தர்கள் கொண்டு வரும் பாலிதீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள், உணவு வகைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், வனத்தில் எளிதில் தீப்பற்றும் மது , பெட்ரோல் போன்ற பொருட்களை கொண்டு செல்வதால் ஏற்படும் விபத்து குறித்து விளக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தாணிப்பாறை கோயில் நுழைவு வாயில் பகுதியில் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு வன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.