பதிவு செய்த நாள்
03
ஆக
2017
01:08
திருமழிசை : திருமழிசை அருகே, சுயம்பு திருவீதி மாரியம்மன் கோவிலில், மூன்றாமாண்டு ஆடித் திருவிழாவில், நாளை, பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. திருமழிசை அடுத்த, மடவிளாகம் பகுதியில் அமைந்துள்ளது சுயம்பு திருவீதி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில், மூன்றாமாண்டு ஆடி திருவிழா, கடந்த, 31ம் தேதி, பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 2ம் தேதி காலை, விசேஷ அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து, நாளை, காலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், காலை 10:00 மணிக்கு, குண்டுமேடு திருசூளினி அம்மன் கோவிலிலிருந்து, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் அதன்பின், மதியம் 12:00 மணிக்கு, மாரியம்மனுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு விசேஷ சந்தன காப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடைபெறும். பின், நாளை மறுநாள், 6ம் தேதி, காலை 6:00 மணிக்கு, அபிஷேக ஆராதனையும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலம், மாலை 6:00 மணிக்கு, சுயம்பு வீதி அம்மன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். அதன் பின், வரும் 8ம் தேதி, காலை 6:00 மணிக்கு, விடையாற்றி உற்சவத்துடன் ஆடி திருவிழா நிறைவு பெறும்.