பழநி, தேசபக்தி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், ராணுவ வீரர்கள் நலனை வலியுறுத்தி 29 மாநிலங்களில் 15 ஆயிரம் கி.மீ.,க்கு சகித் சுவாபி மன் யாத்திரை செல்லும் குழு பழநி வந்தது. டில்லியைச் சேர்ந்த சுவாபிமன் தேஸ்கா அமைப்பு சார்பில், தேசபக்தியை வலியுறுத்தி கடந்த மார்ச் 23ல் இந்தியா கேட் ல் இந்தயாத்திரை துவங்கியது. இக்குழுவினர் நேற்று கோவையில் இருந்து பழநிக்கு வந்தனர். அமைப்பின் நிறுவனர் சுரேந்திரர் சிங்பிந்துரி தலைமையிலான குழுவினரை இந்துமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் வரவேற்றார். மலைக்கோயிலில் வழிபட்டபின், பாத விநாயகர்கோயில் அருகே தேசபக்தியை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். ராமரவிக்குமார் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்குக்கு சிலை வைத்து, அவரை தேச மைந்தன் என அறிவிக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு பள்ளி, கல்லுாரி பாடங்களில் இடம்பெற வேண்டும். தனி மியூசியம் அமைக்க வேண்டும். தியாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவ ஆணையம் அமைக்க வேண்டும். தேசநலனுக்காக பாதுகாப்புபணியில் ஈடுபடும் ராணுவவீரர்கள், காவல் துறையினருக்கு அனைத்து சலுகைககளும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் யாத்திரை செல்கிறோம் என்றார்.