சிவபெருமானுக்கு நாரதர் கொடுத்த மாங்கனியால் கைலாயமே இரண்டாகிப் போனது. கனிக்காக மனம் நொந்த முருகன், கோபித்துக் கொண்டு அம்மையப்பரை விட்டு கிளம்பினார். ஈசனும், தேவியும் பிள்ளையைத் தேடி அலைந்தனர். இறுதியில் ஓரிடத்தில் பாலகன் முருகனைக் கண்டுபிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்தலமே நாமக்கல் அருகில் உள்ள மோகனூர் என்னும் பெயரில் விளங்குகிறது. மகன் திரும்ப கிடைத்ததால் ஏற்பட்டமகனூர் என்ற பெயரே மோகனூராக மாறியதாகக் கூறுவர். இங்குள்ள சுவாமிக்கு அசலதீபேஸ்வரர் என்பது திருநாமம். இவரது சந்நிதியில் ஆடாமல் அசையாமல் தீபச்சுடர் எரிவதால் இப்பெயரால் வழங்கப்படுகிறார். மதுகரவேணி என்னும் பெயரில் அம்பிகை கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தேவார வைப்புத்தலமான இத்தலத்தை திருநாவுக்கரசர், சுந்தரர் பாடியுள்ளனர். ஆடிப்பெருக்கு நாளில், இங்குள்ள குமரித்துறை என்னும் காவிரி தீர்த்தத்தில் நீராடி முளைப்பாரி எடுப்பதும், புது மணத்தம்பதியர் பிள்ளைவரம் வேண்டி வழிபாடு செய்வதும் பெரிய திருவிழாவாக நடைபெறும்.