சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி: இரவு 8.45 மணிக்கு மகர சங்கரம பூஜை

ஜனவரி 14,2023



சபரிமலை,சபரிமலையில் இன்று மகரஜோதி விழா நடக்கிறது. ஜோதி தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மேலும் இரண்டு எஸ்.பி.க்கள் சன்னிதானத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் நடைபெறும் விழாக்களில் மிக பக்திபூர்வமான மகர ஜோதி விழா இன்று நடைபெறுகிறது. இந்த நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் பந்தளம் அரண்மனையி்ல் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணம் அணிவிக்கப்படும். இந்த பவனி நேற்று முன்தினம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டது. இன்று மாலை இது சரங்குத்தி வந்தைடையும்.

மாலை 6.35 மணிக்கு ஸ்ரீகோயில் முன்பு கொண்டு வரும் திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வாங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவர். அடுத்த சில விநாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி மூன்று முறை காட்சி தரும். மகரஜோதிக்கு முன்னோடியாக நேற்று முன்தினம் மாலையில் பிராசாத சுத்தி பூஜைகளும், நேற்று மதியம் பிம்பசுத்தி பூஜைகளையும் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடத்தினார். நேற்று மாலை பம்பையில் பக்தர்கள் பம்பையில் பம்பை விருந்து படைத்து வழிபட்டனர். மாலையில் பம்பை விளக்கு நடைபெற்றது. மூங்கிலில் தேர் கட்டி அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் மிதக்க விட்டனர். இந்த நாளில் நடக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வு மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜை, இன்று இரவு 8.45 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் ஐயப்பனுக்கு அபிேஷகம் செய்யப்படும். பின்னர் அந்த தேங்காய் மூடிகளில் நெய் பிரசாதம் வழங்கப்படும். ஜோதி தரிசனத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தின் சுற்றுப்புறங்களில் கூடியுள்ள நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் இன்று பகல் 12:00 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வரமுடியாது. ஜோதி தரிசனம் முடிந்த உடன் பக்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல மலை இறங்குவர். இந்த நேரத்தில் நெரிசல் ஏற்பட்டு விடாமல் இருக்க போலீசார் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சன்னிதானத்தில் ஒரு எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு எஸ்.பி.ககள் வந்துள்ளனர். எஸ்.பி.க்களான பிஜூமோன் சன்னிதான திருமுற்றததிலும், ஆர். ஆனந்த் ஜோதி தரிசனத்துக்கு அதிக பக்தர்கள் கூடும் பாண்டிதாவளத்திலும், கே.இ. பைஜூ, திருவாபரண தரிசனத்துக்கு பக்தர்கள் முண்டியடிக்கும் கோயில் வடக்கு வாசலிலும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 21 டி.எஸ்.பி., 36 இன்ஸ்பெக்டர், 180 எஸ்.ஐ. உட்பட 1765 போலீசார் சன்னிதானத்தில் உள்ளனர். பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும், ஏ.டி.ஜி.பி.யுமான எம்.ஆர். அஜித்குமர் சன்னிதானத்தில் முகாமிட்டுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்