குஜராத்தில், ஜுனாகாத் பகுதியில் உள்ள கிர்நார் மலையடிவாரத்தில் வஸ்திர பாத ÷க்ஷத்திரம் என்ற சிவன் கோயில் உள்ளது. ஒருசமயம் சிவனும் பார்வதியும் வான்வெளியாக பூவுலகை சுற்றிப்பார்த்து வந்தபோது பார்வதிதேவியின் மேலங்கி இங்கே தவறி விழுந்ததாம். அது விழுந்த இடத்தில் இரு சிவலிங்கம் எழுந்ததாகவும் அதுவே இத்தலம் எனவும் சொல்கின்றனர். வஸ்திரம் என்றால் துணி என்று பொருள். இதுவே இத்தலத்தின் பெயர்க் காரணம் ஆகும். மேற்சொன்ன சம்பவம் நடந்ததைக் கொண்டாடும் விதமாக மகாசிவராத்திரி சமயத்தில் இங்கே ஐந்து நாட்கள் விழா கொண்டாடுகின்றனர். அந்த சமயத்தில் இங்கே உள்ள மிருக குண்டம் எனும் தடாக்தில் நீராடியபின், சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்வோர்க்கு மோட்சம் கிட்டும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. சிவராத்திரி நாள் ஒன்றில் இப்பகுதிக்கு வந்த அர்ஜுனனை கிருஷ்ண பகவான் வரவேற்றாராம். பகவானின் உபசரிப்பால் மகிழ்ந்த பார்த்தன், தான் அப்பகுதிக்கு வந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அதனை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டானாம். பரந்தாமன் அப்படியே வரம் அளித்தாராம். அதையொட்டி சிவராத்திரி நாட்களில் கலை விழாக்களும் இங்கே நடத்தப்படுகின்றன. பசுபதியும் பார்வதியும் வந்த இத்தலத்தில் சிவதரிசனம் செய்வது மங்களங்களையும் மனை நலத்தையும் ஒரு சேரத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.