கோட்டாற்றிலிருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் நாகர்கோவில் நகர எல்லைக்குள் அமைந்துள்ளது இசக்கியம்மன் கோயில். கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல் இசக்கியம்மன் மேலாங்கோடு இசக்கியம்மன் நடுக்காட்டு இசக்கியம்மன் என்று புகழ்பெற்ற இசக்கியம்மன் ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் பலநூறு ஆண்டுகளுக்குமுன் உருவான பழம் பெரும் கோயிலாகும். முற்காலத்தில் இப்பகுதி காடாக இருந்ததாலும் நடுக்காட்டில் கோயில் இருந்ததாலும் இது நடுகாட்டு இசக்கியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி இசக்கியம்மன் கோயிலுக்குச் சென்று பால்சோறு படைத்து வணங்கியதாக இளங்கோவடிகள் கூறியுள்ளார். தேவி அமர்ந்த கோலத்தில் இருக்க, இடப்பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அருகே முருகன், ஐயப்பன், சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கூட்டங்கூட்டமாகச் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த இரண்டு நாட்களும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. கேட்ட வரம் தந்தருளும் கண்கண்ட தெய்வமாக இசக்கியம்மன் விளங்குகிறார். வருடந்தோறும் ஆவணிமாதம் பத்து நாட்கள் திருவழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வில் கலந்து கொள்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே இசக்கியம்மனை அதிகமாக வழிபடுகிறார்கள். இசக்கியம்மனை வழிபட்டால் பெண்களின் மாதாந்திர பிரச்சனைகளில் உள்ள சிக்கல்கள் தீருமென்றும், சுகமான குழந்தைப்பேறு உண்டாகும் என்றும், குழந்தைகளின் நோய் நொடிகள் நீங்கும் என்றும் நம்புகிறார்கள்.