திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி விசாக விழா மே31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. இன்று காலை 7:00 மணிக்கு அம்பாள் கோபத்தில் ஆதித்திருத்தளிநாதர் கோயிலுக்கு புறப்பாடு ஆகி கோயிலில் தவத்தில் அமர்ந்தார். தொடர்ந்து சோமஸ்கந்தர் ஆதித்திருத்தளிநாதர் கோயிலுக்கு சென்று அம்மனை சமாதானப்படுத்தி அழைத்து வருதல் நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரத்தின் கீழ் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் சுவாமியும் அம்பாளும் திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தென்மாப்பட்டு வேலாயுதசாமி மடத்திலிருந்து சோழிய வெள்ளாளர் உறவின்முறையினர் சீர்வரிசை எடுத்து வந்தனர். காலை 9:00 மணிக்கு ரமேஷ் குருக்கள்,பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் யாக பூஜைகளை நடத்தினர். பின்னர் காலை 10:10 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் சுவாமிக்கும்,அம்பாளுக்கும் மாலை மாற்றி, திருப்பூட்டு நடந்தது. மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.