பதிவு செய்த நாள்
23
ஏப்
2012
05:04
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும் நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற முனிவர் விஷ்ணுவை தியானித்து தவத்தில் இருந்தார். அவரைக் காண துர்வாசர் ஒருமுறை வந்திருந்தார். சுதபஸ், துர்வாசரைக் கவனிக்காமல் இருந்து விட்டார். கோபத்தில் துர்வாசர், மண்டூகமாக(தவளையாக) பிறக்கும்படி சபித்துவிட்டார். இதன்பின் சுதபஸ், மண்டுகமுனிவர் என்று பெயர் பெற்றார். சாபவிமோசனமாக துர்வாசர், வேகவதி என்னும் வைகை ஆற்றில் விஷ்ணுவை தியானித்து தவம் செய்ய மீண்டும் பழைய உருவம் கிடைக்கப் பெறுவாய் என்று கூறினார். அதன்படி தவளை உருவத்தோடு வைகையாற்றில் தவம் செய்தார். சித்ரா பவுர்ணமியில் வைகைஆற்றில் இறங்கும் கள்ளழகர், மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருள்கிறார். அப்போது மண்டூகமகரிஷிக்கு சாபவிமோசனம் அருள்கிறார். மே 6ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம் நடக்கிறது.
அழகருக்கு ஆண்டாள்மாலை: ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ராமானுஜரைக் காண, மூலஸ்தானத்திலிருந்து ஆண்டாளே வெளியில் வந்து வாரும் அண்ணரே என்று அழைத்தார். பின் ராமானுஜர் அவரிடம், அழகரின் விருப்பத்தை தெரிவித்தார். இதையடுத்து ஆண்டாள், தான் சூடிய மாலை, பரிவட்டம், கிளி, ஸ்நான பவுடர் போன்றவைகளை, வடபெரும் கோவிலுடையான் சடகோபன் நம்பி பரம்பரையினர் மூலம், அழகருக்கு கொண்டு போய் சேர்ப்பர் என தெரிவித்தார். அன்று முதல் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் போது, ஆண்டாள் சூடிய மாலையை, மதுரைக்கு கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்தமாலையை அணிந்து அழகர் ஆற்றில் இறங்குகிறார். இம்மாலை செவ்வந்தி, இருவாச்சி,சம்பங்கி, மரிக்கொழுந்து, மருதுபச்சை பூக்களால் கட்டப்படுகிறது. பின் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு , அதை மாடவீதி,கந்தாடை வீதிகள் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆண்டாளுக்கு திருஷ்டி ஏற்படாமலிருக்க, பித்தளை செம்பில் சர்க்கரை, சுக்கு, ஏலம் கலந்த தண்ணீரில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கின்றனர். பின் கூடலழகர் கோயிலில்,மாலைக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடா சலபதிகோயில் ஆஞ்சநேயர் சன்னதியில் இறக்கி வைக்கப்படும். அப்போது அக்கோயிலில் தங்கி இருக்கும் அழகர், அபிஷேகத்திற்கு பின் மேளம், குடை, தீப்பந்தம் போன்றவைகளுடன் ஆஞ்சநேயர் சன்னதிக்கு, அழகரின் பரிவாரங்கள் சென்று, ஆண்டாள் சூடிய மாலை, பரிவட்டம், ஸ்நானப்பவுடர், கிளி போன்றவைகளை அழகருக்கு அணிவிப்பர். பத்தாண்டுகளுக்கு முன் வரை ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு நடந்தே இம்மாலை கொண்டு வரப்பட்டது. தற்போது காரில் கொண்டு வரப்படுகிறது.
ஆண்டாளின் வேண்டுதல்: குலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் கடனாக 100 அண்டாக்களில் அக்கார அடிசிலை(100 லிட்டர் பாலை காய்ச்சி 25 லிட்டர் பாலாக மாற்றி முந்திரி,பாதாம், பிஸ்தா, கற்கண்டு, குங்குமப்பூ போன்றவைகளை விட்டு கிளறிய சர்க்கரை பொங்கல்) செய்து தருவதாக வேண்டிக்கொண்டார். அதன்படியே ஆண்டாள், ரங்கமன்னாரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால், ஆண்டாள், அழகருக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செய்யவில்லை. பின், 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணம் கொண்டு அக்கார அடிசில் தயாரித்து அழகருக்கு படைத்தார். ராமானுஜரின் பக்திக்கு இரங்கிய அழகர், அவருக்கு தரிசனம் கொடுத்தார்.
தர்மதேவனின் தவபூமி: உயிர்கள் செய்த பாவபுண்ணியத்தின் படி அவரவர் விதி முடிந்ததும் உயிரைப் பறிப்பவர் எமதர்மன். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் நீதி நெறி தவறாமல் இருப்பதால் இவருக்கு தர்மராஜர், நீதிதேவன் என்ற பெயர்களும் உண்டு. காலச்சக்கரத்தை இயக்குபவர் என்பதால் காலதேவனாகவும் இருக்கிறார். இவர் ஒருசமயம், தர்மவடிவமான காளையின் வடிவெடுத்து பூலோகத்தில் விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார்.அந்த இடமே அழகர்கோவில் பகுதியாகும். தவத்திற்கு இணங்கிய பெருமாளும் சுந்தரராஜராக பேரழகுடன் அவர் முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அதே கோலத்தோடு என்றென்றும் அங்கு வீற்றிருக்கும் படியும் தர்மதேவன் வேண்டிக் கொண்டார். அதன்படி, தேவலோக தச்சனான விஸ்வகர்மாவை அழைத்து பெரிய கோவிலை நிர்மாணித்து வழிபட்டார்.
அழகா! கள்ளழகா!
மகாவிஷ்ணுவிற்கும், தசாவதாரங்களில் ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கும் சுந்தர் என்ற சொல்லை வடமொழியில் பயன்படுத்துவர். அச்சொல் தமிழில் அழகர் என்று அழகர்கோவில் பெருமாளுக்கும் ஏற்பட்டது. பாண்டி நாட்டு திவ்யதேசங்களில் உள்ள இரு கோயில்களில் பெருமாள்அழகர் என்று வழங்கப்படுகிறார். மதுரையில் கூடலழகராகவும், அழகர்கோவிலில் கள்ளழகராகவும் சேவை சாதிக்கிறார். அதிலும் அழகர் என்ற சொல் அழகர் கோவில் சுந்தரராஜருக்கு உரியதாக மாறிவிட்டது. ஆண்டாள் பாசுரங்களில் சுந்தரராஜரை குழலகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்று போற்றுகிறார். திருமங்கையாழ்வார் இவரை, அச்சோ ஓரழகியவா என்று வியந்து பாடியுள்ளார்.