சித்திரைத்திருவிழாவின் ஏழாம்நாளன்று சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர். இந்த தரிசனத்தைக் காண்பவர்களின் செயல்கள் தடையின்றி நிறைவேறும். முன்ஜென்ம பாவமும் நீங்கும். ஸ்ரீசைலத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு நீண்ட காலமாக புத்திரப்பேறு இல்லை. சிவனைக் குறித்து யாகம் செய்வதற்காக நிலத்தை உழுதபோது, பொற் பேழையில் அழகிய ஆண்குழந்தை கிடைத்தது. குழந்தைக்கு சிவநாமங்களில் ஒன்றான நந்தி என்று பெயரிட்டு வளர்த்தார்.ரிஷிகளிடம் கல்வி கற்க அனுப்பினார். சகல கலைகளிலும் வித்தகராகஆனார் நந்தி. அவருக்கு விதிப்படி அற்பாயுளே இருந்தது. சிலாதருக்கு மிகுந்த வருத்தம். தந்தையின் வருத்தத்தைப் போக்க சிவனை நோக்கி மூன்றுமுறை தவத்தில் ஆழ்ந்தார். முதல்முறை என்றும் மாறாத சிவ பக்தியை வரமாகப் பெற்றார். இரண்டாம் முறை சிவநிந்தை செய்பவர்களைத் தண்டிக்கும் உரிமை பெற்றார்.மூன்றாம் முறை சிவபெருமானின் அம்சத்தையே பெற்று அழியாவரம் பெற்றார். அதுமுதல் நந்தி என்ற பெயரோடு ஈஸ்வரர் என்றபட்டமும் சேர்ந்து நந்திகேஸ்வரர் என அழைக்கப்பட்டார். சுயம்பிரபை என்ற பெண்மணியை மணம்செய்து கயிலாயத்தை அடைந்து சிவகணங்களின் தலைவரானார். நந்திகேஸ்வரர் சிவந்தநிறம் கொண்டவர்.நெற்றிக்கண் உட்பட மூன்று கண்கள் பெற்றவர். ஜடாமுடியும், வலக்கையில் மழுவும், இடக்கையில் மானும் ஏந்தி இருப்பார். அன்னை மீனாட்சி பவனிவரும் யாளி வாகனம் யானையும், சிங்கமும் கலந்த உருவமாகும். மதம் பிடித்து அடங்காமல் திரியும் யானையும், தற்பெருமை,கோபம் கொண்டு அலையும் சிங்கமும்அருள்சக்தியான அன்னையின் முன் அடங்கி ஒடுங்கி விடுவதுபோல, ஆணவம், தற்பெருமை போன்ற கீழான குணங்கள் கொண்ட மனிதனும், அன்னையின் அருளால்அவை நீங்கி நற்கதி பெறுவான். மீனாட்சிசுந்தரேஸ்வரர் அருளால் நற்குணங்களைப் பெற்று வாழ்வோம்.