பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நிற்க போகிறவர் குருபகவான் தான். குருவின் ஏழாம் பார்வை ராசியில் விழுவதால் வாழ்வில் குறையொன்றும் இருக்காது. செயலில் வெற்றி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குருவின் பார்வையால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் மத்தியில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற ஆடம்பர வசதிகள் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடை பிடிப்பது நல்லது. முயற்சியில் தடைகள் வரலாம். ஆக.31க்கு பிறகு பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஆண்டின் இறுதியில் சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்
பெண்களுக்கு தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். குருவின் 5ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை குடுபத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. அரசு வகையில் அனுகூலம் உண்டு.
* வியாபாரிகள் மார்ச் 27ல் இருந்து ஜூலை 7வரை எதிரி தொல்லையை முறியடித்து வெற்றி காண்பர்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு இருந்தாலும் குருபலத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.31க்கு பிறகு நன்மை அதிகரிக்கும்.
* மருத்துவர்கள் ஆக.31க்கு பிறகு போட்டியாளர் தொல்லையில் இருந்து விடுபடுவர்.
* ஆசிரியர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆக.31க்கு பிறகு தடைகள் விலகும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் குருபலத்தால் முன்னேற்றம் காண்பர்.
* ஐ.டி., துறையினர் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையை வெளிப் படுத்தி நற்பலன் பெறுவர்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31 க்கு பிறகு சாதகமான காற்று வீசும். புதிய பதவியும் கிடைக்கும். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு முயற்சியில் தடை, பண நஷ்டம், அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.
* கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், பழ வகைகள் போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
* மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். போட்டிகளில் வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். எதிலும் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம்.
* வியாபாரிகளுக்கு கூட்டாளியிடம் கருத்து வேறுபாடு, வீண் அலைச்சல் ஏற்படலாம்.
* வக்கீல்களுக்கு அலைச்சல் அதிகரிக்கலாம். வெளியூரில் தங்க நேரிடலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை பணிச்சுமை அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு விரயம், திருட்டு சம்பவங்கள் ஏற்படலாம்.
* விவசாயிகள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை செலவு பிடிக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம்.
பரிகாரம்:
● சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசிமாலை
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
● வெள்ளிக் கிழமையில் பசுவுக்கு அகத்திக் கீரை