பதிவு செய்த நாள்
17
ஜன
2020
10:01
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின், கல்ஹாரி தீர்த்தத்தில் இருந்து, கோவில் அர்ச்சகர்கள் தண்ணீர் கொண்டு சென்று மூலவருக்கு பூஜை நடத்தும் பணி, நேற்று முன்தினம் முதல் துவங்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் மலைக்கோவில் மூலவருக்கு காலசந்தி, உச்சி காலம் மற்றும் சாய்ரட்சை போன்ற மூன்று சிறப்பு பூஜைகள் தினமும் நடத்தப்படுகின்றன.இந்த பூஜைக்கு, மலைக்கோவில் அருகில் உள்ள கல்ஹாரி தீர்த்தம் என்கிற இந்திர தீர்த்த குளத்தில் இருந்து, தண்ணீர் கொண்டு சென்று பூஜை செய்து புராதன காலமாக வழிபட்டு வந்தனர்.இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் இந்திர தீர்த்தத்தை முறையாக பராமரிப்பு மற்றும் போதிய மழைநீர் வரத்து இல்லாததால், குளத்தில் தண்ணீர் மாசுப்பட்டதை தொடர்ந்து, பூஜைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கம் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, மலைக்கோவிலுக்கு, பைப் லைன் மூலம் தண்ணீரைகொண்டு சென்று, மூன்று காலை பூஜை செய்தனர்.
இந்நிலையில், ஒரு ஆண்டாக, திருத்தணி முருகன் திருவடி சபையினர், கோவில் நிர்வாகம் ஒப்புதலுடன், கல்ஹாரி தீர்த்தகுளத்தை சீரமைத்தும், குளத்தை சுற்றி மாசுப்படாத வண்ணம் கம்பி வலைகள் போட்டு பத்திரப்படுத்தினர்.மேலும், கல்ஹாரி தீர்த்த குளத்திற்கு, யாரும் நுழையாத வண்ணம் சுற்றுச்சுவர் மற்றும் வாசற்கதவு ஏற்படுத்தி மழை நீர்வரத்து கால்வாய் ஏற்படுத்தி தண்ணீரை துாய்மையாக பராமரித்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் தை மாதம் முதல் நாள் பொங்கல் தினத்தன்று, 30 ஆண்டுகளுக்கு பின், கோவில் நிர்வாகம் உத்தரவு பெற்று, கோவில் அர்ச்சகர்கள் கல்ஹாரி தீர்த்தத்தில் இருந்து, தண்ணீர் கொண்டு சென்று, மூலவருக்கு சிறப்பு நடக்கும் வழக்கம் துவங்கியது. இனிவரும் நாட்களில், பூஜைக்கு கல்ஹாரி தீர்த்தம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.